Thursday, August 30, 2012

மழை



மழையின் அறிகுறி மனதில் கீதம்பாட
வரவேற்க விரைகிறேன் வாசலுக்கு.......
மேகத்திடம் விடைபெற்ற மழைத்துளிகள்
வேகமாய் வீழ்கிறது புது உலகு காண......
 

எனக்கான முதல்துளி நடு உச்சியில்
நயமாய் விழுந்து பரவசத்தில் ஆழ்த்துகிறது.
இரண்டாம் மழைத்துளி தோளில் தரையிறங்கி
மனதில் மகிழ்ச்சிபூவை தூவிவிட்டு
விரல்நுனி நோக்கி விரைகிறது.
 

அடுத்தடுத்து வீழ்ந்த துளிகள்
மேனி முழுதும் நனைத்து
இன்பத்தால் இதயத்தை நிரப்புகிறது.
 

பாதங்களை மூழ்கடித்த தண்ணீரில்
தாளமிடுகிறேன் தப்புத்தப்பாய்.........
மழைத்துளிகள் அதற்கும் அழகாய்
நர்த்தனமாடி மகிழ்விக்கின்றது.
 
மறுஜென்மம் எடுக்கிறது குழந்தைத்தனம்.
அடித்துச் செல்லும் மழைக்கு வழித்துணையாய்
சோகங்கள் விடைபெறுகின்றன என்னிடமிருந்து.

மழை கடந்த பின்பும் அதன் நினைவாய்
மேனியெங்கும் பரவிக்கிடக்கின்றன
சில மழைத்துளிகள்..............................


No comments:

Post a Comment