Sunday, August 26, 2012

பயணத்தில்......


 
அடித்துப் பிடித்து அமர்ந்தபின்
மறைகிறாய் இரயிலின் ஓட்டத்தில்
ஒரு புள்ளியாய், உன் வாசனையை
காது வருடும் காற்றில் கசியவிட்டு.......
நினைவுகளில் நாழிகைகள் நகர்வதால்
பலவித பாவங்கள் நர்த்தனமாடுகின்றன,
முகத்தினில், பைத்தியமோ என்ற ஐயத்தை
உயிர்தெழவைக்கிறது சகபயணியிடம்

அசை போட்டு ஆனந்தப்படுவதில்,
மனம் நிரம்பி, இதயத்தில் வழிந்து,
இரத்த நாளங்கள் துடித்தெழுந்து
சிவப்பு பூக்களாய் பூக்கின்றன
வெண்மையான கன்னங்களில்.

இதழ்களோ உன் நாமத்தையே
தவமாய் உச்சரிப்பதால் வரமாய்
புன்னகை அங்கே தவழ்கிறது.
 
நினைவுகளில் மூழ்கி நினைவிழந்ததால்
இறங்க வேண்டிய இடத்தை கடந்தபிறகே
இறங்க யத்தனிக்கிறேன் உனைத் திட்டியபடியே.......
மெதுவாய் நீட்டினார் டாக்டரின் விலாசத்தை
அந்த பக்கத்து சீட்டுக்காரர்.................................

அவரின் பரிதாப பார்வை புரிந்து
இடி போல் நான் சிரிக்க
மின்னலென மறைந்தே போனார்

தொலைவிலிருந்தும் எனைப்
பைத்தியமாக்கும் உன்னை
ஆயுள் தண்டனைக் கைதி
ஆக்கிவிட்டேன் இதயச் சிறையிலே........
 

No comments:

Post a Comment