Sunday, August 26, 2012

துக்கங்களை தூக்கிலிட


 
துருவங்களாய் நாம் பிரிந்து
துக்கங்களைப் பெரிதாக்கி
துன்புறும் வேளையிலே
தூக்கத்திலும் துக்கமடைக்கிறது.
துயரங்களை தூக்கிலிட
துடிக்கிறது துவளும் மனம்.

ஆயிரம் அர்த்தங்கள்
அமிழ்ந்த அருஞ்சொற்களை
அருவியாய் கொட்டும் உன் அதரங்கள்
அமைதியெனும் ஆடைபூண
ஆற்றாமையில் அரற்றுகிறேன்.

காற்றினிலே கலந்துவந்த
கலங்கவைக்கும் கட்டிலடங்கா
கற்பனைகளிலுள்ள கபடங்களை
கண்டுணர காதல்மனமும்
காலதாமதமாக்க, காலமும்
காலனாய் காட்சியளிக்க
காத்திருக்கும் பொறுமையற்று
காணாமல் போனாயோ?
 
இன்பமாய் நாமிருந்த காலங்களில்
இனியதாய் நீயுரைத்த இன்சொற்கள்
இகழ்ச்சியாய் இன்று எனை நோக்க
இறக்கும் என் இதயத்திற்கு
இதமாய் நீயிருக்கும் நாளுக்காக
இருவிழி பூக்க காத்திருக்கிறேன்.
 

1 comment:

  1. நல்ல அழகு தமிழ் நடை, கொஞ்சுகிறது.

    ReplyDelete