Thursday, July 26, 2012

மன்னிப்பாயா செல்ல மகளே


 
மன்னிப்பாயா செல்ல மகளே
ஜனனத்திற்கு முன்பே உனக்கு
மரணத்தைப் பரிசளிக்கப் போகும்
இந்தத் தாயை மன்னிப்பாயா.

கனவுகள் பல கண்டு
கருவினில் உனைச் சுமந்து
பூரித்து நிற்கையிலே,
மருத்துவரின் சொற்கள்
இடியாய் விழுந்தது செவிகளில்.

மூளை வளர்ச்சியற்ற கருவாதலால்
கலைத்துவிடுவதே உத்தமமாம்.

கற்பனையில் செதுக்கிய உன் முகம்
கண்முன்னே வந்து மறைய
கலங்கித்தான் நிற்கிறேன்.

மனதைக் கல்லாக்கி,
புத்தியின் சொல்கேட்டு
தலையசைத்தேன் சரியென்று.

உன் மரணத்திற்கு நாள்குறித்து
சொல்லுகையில் எல்லாம்
மரத்துப் போய் ஊமையானேன்.

என் செல்ல மகளே,
நாளை வரை என்னுள்
நீயிருக்க அனுமதியாம்.
வாழ்நாளெல்லாம் நெஞ்சில்
உனைச்சுமக்க யார் அனுமதியும்
தேவையில்லை கண்ணே.

உன்னுடனே என் உயிரும்
துணையாக வரத்துடிக்க,
உன் சகோதரனின் பிஞ்சுக்கரம்
என் முகம் வருட அவனுக்காய்
இப்பூமிதனில் வாழத் துணிந்தேன்.

உன் நலனுக்காய்
உன் உயிரை எமனுக்கு
தாரை வார்க்கும் என்னை
மன்னித்துக் கொள் செல்ல மகளே.......


 

No comments:

Post a Comment