Tuesday, July 31, 2012

ஒத்திகை



மெதுவாய் அழைத்த உன் குரல்
நரம்புகளில் நாதம் மீட்ட
கண்கள் உன் திசை தேட
வார்த்தைகள் தொண்டைக்குள்
சரணாகதியடைய, சிலையாய்
நிற்கிறேன் உன் எதிரில்.
 

எத்துணை ஒத்திகைகள் இதற்காக
அத்துணையும் தற்கொலை செய்து கொள்ள
முதல் சந்திப்பில் முற்றிலுமாய் பேச்சிழந்து
தோல்வி கண்ட வீரனாய் மண் நோக்குகிறேன்.


அருவி போல் கொட்டுகிறாய் கேள்விகளை
அத்துணையும் உள்வாங்கி சேமிக்கிறேன்
பிரிதொருநாளில் பதிலளிக்க.............
உன் ஒவ்வொரு அசைவையும்
தேக்கி வைக்கிறேன் விழிகளில்,
விழி பிதுங்கி கண்ணீராய் கொட்டுகிறது.
 

விடை பெறுகிறாய் வியப்புடனே
கண்ணீரின் காரணம் புரியாததால்,
தயாராகிறேன் நம் அடுத்த
சந்திப்பிற்கான ஒத்திகைக்கு

No comments:

Post a Comment