Tuesday, February 28, 2012

இதயத்துக்குரியவனே



என் கண்வழி உள்புகுந்து
இதயத்தில் சிம்மாசனமிட்டு
என் உணர்வுகளை ஆள்பவனே


என் உணர்வுகளுக்கு
உயிர்கொடுக்க
உயிர்த்தெழுகிறாய்
எழில்மிகும் ஓவியமாய்
என்னுள்ளே


எனக்கானதை எல்லாம்
உனக்காகவே
சாசனமிட்டுத் தருகிறேன்.


ஆதவனின் வெப்பத்தில்
பனியுருகி நதியாவதுபோல்
உன் அன்பின் கதகதப்பில்
என் உயிர் உருகி
வழிந்தோடுகிறது
கண்ணீர் துளிகளாய்.


நாள்கணக்காய் பேசித்
தீர்த்த பின்னும்
பேசாத உணர்வுகள்
கடலளவாய் மீந்திருக்க
மொத்தமாய் மொழிபெயர்க்கிறேன்
மொழியை ஓர் முத்தமாய்.


ஒலிக்கான வேகத்தை
மனமும் கொள்ள
ஈடு கொடுக்கத்
தெரியா மொழியோ
மெளனத்தைப் போர்த்திக் கொள்ள,


கருசுமக்கும் தாயாய்
மெளனம் அடர்த்தியாய்
சுமந்திருக்கும் நினைவலைகளை
விரல்கள் பிரசவிக்க
உனக்கான கவிக்குழந்தை
அழகாய் இதழ்விரிக்கிறது.


No comments:

Post a Comment